Sunday, November 24, 2013

சச்சினை விட பாரத ரத்னாவுக்கு ஏற்றவர் விஷி ஆனந்த் - ஏன்? எனது Deccan Chronicle கட்டுரை

இது குறித்து நான் டெக்கான் குரோனிகள் நாளிதழில் எழுதியது இதோ.

It's high time Anand awarded the Bharat Ratna - கட்டுரையின் உரல்


Sunday, November 17, 2013

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா?

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா? - இட்லிவடையில் பதிப்பிக்கப்பட்டது
 
சச்சின் ஓய்வு பெற்ற நாளே, 40 வயதிலேயே, அவரது கிரிக்கெட் சாதனைக்காக, இந்திய அரசு அவருக்கு நாட்டின் மிக உயரிய சிவில் விருதான பாரத ரத்னாவை வழங்கி கௌரவித்துள்ளது. இது சரி தான், இல்லை, நாட்டுக்காக அவர் ஆற்றிய தொண்டு என்ன, நாட்டுக்கு நல்வகையில் பங்களிக்காத அந்த கிரிக்கெட் சாதனைக்கு பாரத ரத்னாவா என்று கேட்டு, இது சரியில்லை என்று இரு தரப்பு வாதங்களை பார்க்க முடிகிறது. ஒப்புக்குச் சப்பாணியாக, அவருக்கு மட்டும் விருது கொடுத்தால் பிரச்சினை வரக்கூடும் என்று கருதி, (எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய) CNR ராவ்-க்கும் இப்போது சேர்த்து வழங்கியுள்ளது நல்ல நகைச்சுவை.

நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில், கண்கூடாக பலன் தரும் சிலபல சாதனைகளை செய்தவர்களுக்கு மட்டும் தான் விருது என்றால், ஏற்கனவே (சமீப காலகட்டத்தில்) பாரத ரத்னா வழங்கப்பட்டவர்களில் சிலபலர் தேற மாட்டார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சச்சின் உட்பட இதுவரை 43 நபர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். அப்பட்டியலில், 10 தென்னிந்தியர்கள் (அதிலும் முதல் மூவர் 1954-லிலேயே விருது பெற்றவர்கள் என்பதை நினைவு கொள்க!) மட்டுமே இருப்பதில் பெரிய ஆச்சரியம் ஏதும் இல்லை! ’தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது’ என்ற கூற்று இன்று வரை பொருந்துகிறது!

இது போன்ற ஓரவஞ்சனையை காரணம் காட்டியே, பிரபல பாடகி எஸ்.ஜானகி, சென்ற வருடம் பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காகவே எம்ஜியாருக்கும், ராஜிவ் காந்திக்கும் பாரத ரத்னா தரப்பட்டது என்ற பேச்சிலும் நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாட்டுக்கு தொண்டு, அதனால் விளைந்த நன்மை ஆகியவை மட்டுமே பாரத ரத்னா விருதுக்கான அளவுகோல்கள் அல்ல. ஒரு மனிதர், ஒரு துறையில் செய்த உயர்ந்த/ஒப்பில்லாத சாதனையை கௌரவப்படுத்தும் விதமாகவும் அது வழங்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அத்தகைய நோக்கில், சச்சினுக்கு விருது வழங்கப்பட்டது சரியே என்றாலும், அவரை விட விளையாட்டுத் துறையில் அதிகம் சாதித்த, இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் ஒரே செஸ் வைரம், இந்தியாவின் (ஏன் ஆசியாவின்) ஒரே உலக செஸ் சேம்பியன் (5 முறை பட்டம், கடந்த 6 ஆண்டுகளாக undisputed Chess champion of the World) விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காமல், சச்சினுக்கு மட்டும் வழங்கியதற்கு நியாயமான காரணங்கள் எதுவுமில்லை என்பது நிதர்சனம்!

மேலே குறிப்பிட்டதில், World என்று வலியுறுத்தியதில் ஒரு காரணமுள்ளது. உலகில் 8 (ஒப்புக்குச் சப்பாணி நாடுகளை விட்டு விடலாம்) நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில், ஒரு டீம் விளையாட்டில், சச்சின் சாதித்ததைக் காட்டிலும், 120 நாடுகளில் விளையாடப்படும், அன்றிலிருந்து இன்று வரை கடுமையான போட்டி நிலவி வரும், தனிமனித விளையாட்டான செஸ்ஸில் ஆனந்த் சாதித்தது மிக மிக மிக அதிகம் என்பதை அவர் சாதனைகளை உற்று நோக்கினாலே போதும்.

2012-ல் நான் எழுதிய இடுகையிலிருந்து சில விஷயங்களை பகிர்கிறேன்.



”இந்தியாவின் முதல் உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம், மொத்தப் புள்ளிகள் என்ற 3 பிரிவுகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ் டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு, இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே. மிக உயரிய விருதாக கருதப்படும் செஸ் ஆஸ்கார் பட்டத்தை ஆனந்த் 6 முறை வென்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில், ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த் ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.”


மேலும், கடந்த 22 ஆண்டுகளாக ஆனந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகளால் இந்தியாவில் செஸ் விளையாட்டில் பெரும் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு செஸ் புரட்சியே நடந்துள்ளது. இப்போது இந்தியாவில் 34 கிராண்ட் மாஸ்டர்களும், 70-க்கும் மேற்பட்ட இண்டர்நேஷனல் மாஸ்டர்களும் உள்ளனர். பணம் அதிகம் புழங்காத செஸ் விளையாட்டில், இத்தகைய மறுமலர்ச்சியை, ஆனந்த் தனியொரு மனிதராக நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்றால் அது மிகையில்லை. இதை நிகழ்த்தியும், 27 ஆண்டுகளாக, இன்று வரை (44 வயது வரை) இந்தியாவின் தலை சிறந்த ஆட்டக்காரராக விளங்கி வருகிறார்! இவற்றுக்கும் மேல், ஆனந்த் எவ்வகையான சாதனை செய்து, பாரத ரத்னாவுக்கு ஏற்புடையவராக ஆக முடியும் என்று புரியவில்லை.

சௌரவ் கங்குலி, ஆனந்த் வெளிநாட்டில் (ஸ்பெயின்) அதிகம் தங்கி இருப்பதால், அவருக்கு பாரத ரத்னா வழங்க ஒரு தயக்கமிருக்கலாம் என்று கூறியிருப்பதை ஏற்க இயலாது. வெளி நாட்டவரான நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும்போது, வெளிநாட்டில் தங்கியிருக்கும் “இந்திய” ஆனந்துக்கு வழங்குவதில் என்ன தயக்கம்! ஆனந்த் வட இந்தியராக இருந்திருந்தால், அவரது மகா சாதனைகளுக்கு அவருக்கு இந்நேரம் பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதற்கு, கிரிக்கெட் பிரபல விளையாட்டு என்பதனால், என்ற கூற்றை ஓரளவு தான் ஏற்க முடியும். பாரத ரத்னா பீம்சென் ஜோஷி மாமேதை என்பதில் ஐயமே இல்லை. ஆனால், அவரது ஹிந்துஸ்தானி இசையை எத்தனை சாதாரணர்களால் புரிந்து ரசிக்க இயலும். அதனால், பிரபலம் என்பது அளவுகோல் ஆகாது. உண்மை என்னவெனில், ஆனந்த் போல அல்லாமல், சச்சினின் இமேஜ் திறமையாக உருவாக்கப்பட்டு பேணிக் காக்கப்பட்டது. மீடியாவும் அதில் பங்களித்தது.

ஆனந்த், தனது ஒவ்வொரு பெரும் வெற்றிக்குப் பிறகு, மீடியாவில் தோன்றி, அதற்கான அவரது உழைப்பை, சிரமங்களைப் பற்றி பெரிய அளவில் பேசியதில்லை. அதனால், செஸ் விளையாட்டு குறித்து ஓரளவு அறிந்தவர் மட்டுமே, அவரது ஹிமாலய சாதனையின் வீச்சை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், சச்சினுக்கு பல மும்பை (சினிமா, அரசியல், தொழில்துறை) பிரபலங்களின் ஆதரவு சதாசர்வ காலமும் இருந்து வருகிறது. தெற்கில் இருக்கும் பிரபலங்களும், இந்திய செஸ் ஃபெடரேஷனும் இது போன்ற ஒரு status-ஐ ஆனந்துக்கு ஏற்படுத்த தவறி விட்டனர். இதனாலேயே, ’சச்சினுக்கு பாரத ரத்னா’ என்பது கடந்த 2 ஆண்டுகளாக கேட்டது போல ஆனந்துக்கு பாரத ரத்னா என்ற கோரஸ்/கோஷம் எந்த மட்டத்திலும் பெரிதாக கேட்காததற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சச்சினை ராஜ்யசபா உறுப்பினராக ஆக்கியுள்ளது. இப்போது, சரியான சூழலில், அவருக்கு பாரத ரத்னா வழங்கி அவரை காங்கிரஸ் அனுதாபியாக மாற்றியிருக்கிறது. மெல்ல மெல்ல, அவரை தேர்தல் பிரச்சாரத்துக்கு ஓரளவுக்கு பயன்படுத்திக் கொள்ள ஒரு யுக்தியாக இது இருக்கலாம். நன்றியுணர்ச்சி சச்சினுக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா?!? இறுதியாக, சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கக்கூடாது என்பதல்ல வாதம். அவரை விட மகத்தான (விளையாட்டில்) சாதனையாளரான உலக செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காததில் உள்ள நியாயமின்மையும், அரசியல் சார் ஓரவஞ்சனையும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.



இந்த இரண்டு கட்டுரைகளை (ஒன்று ஆனந்த் பற்றி, ஒன்று சச்சின் பற்றி) கட்டாயம் வாசிக்கவும்.

Viswanathan Anand is as precious as Sachin Tendulkar -----
http://www.rediff.com/sports/slide-show/slide-show-1-viswanathan-anand-is-as-precious-as-sachin-tendulkar/20131109.htm#5

Master Blaster or Master Laster: A revisionist look at Sachin Tendulkar’s career -----
http://www.livemint.com/Opinion/PKgPHTk5wKn8DZLRpCtCyK/Master-Blaster-or-Master-Laster-A-revisionist-look-at-Sachi.html

- எ.அ.பாலா

Thursday, November 07, 2013

தீயா வேல செய்யணும், ஆனந்து! விஷி ஆனந்த் vs கார்ல்ஸன் - செஸ் 2013

செஸ் விஸ்வநாதன் ஆனந்துக்கு ‘உலக நாயகன்’ என்பது கமலுக்கு ரவிக்குமார் வழங்கிய பட்டம் போன்றதன்று.  அவர் அங்கீகரிக்கப்பட்ட செஸ் உலக நாயகன், 5 முறை அப்பட்டத்தை வென்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும், 2008 மற்றும் 2010-ல் முறையே விளாடிமிர் க்ராம்னிக், டொபோலோவ் ஆகிய 2 ஜாம்பவன்களுக்கு எதிராக ஆடி அவர் வென்றதைப் போன்ற சாதனைகளை இனி ஒரு இந்தியர் அடுத்த 25 ஆண்டுகள் நிகழ்த்தப்போவதில்லை என்று தாராளமாகக் கூற முடியும். தனது 18 வயதிலேயே பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் ஆனந்த் ஒருவரே.

ஆனந்த்-கெல்ஃபாண்ட் 2012 உலக சேம்பியன்ஷிப் போட்டியின் ஆட்டங்கள் அத்தனை சிலாகியமில்லை என்று கூறலாம். ஆனந்த் தனது attacking, aggressive அணுகுமுறையை கைவிட்டு, சற்றே பாதுகாப்பு ஸ்டைலில் விளையாடியதை கார்போவ், கேஸ்பரோவ் உட்பட சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். கேஸ்பரோவ் ஆனந்த் ஒய்வு பெறலாம் என்று கூட கூறினார்.

ஆனந்துக்கு 43 வயது ஆன பின்னும், அவரால் இந்தியாவில் ஒரு செஸ் மறுமலர்ச்சி உண்டான பின்னும், பல கிராண்ட் மாஸ்டர்கள் இந்தியாவில் உருவாகி இருந்தாலும், அவரது செஸ் திறன், மன வலிமை, சேம்பியன் குணம் (இவற்றில் ஓரளவு) கொண்ட ஒரு செஸ் ஆட்டக்காரர் கூட இந்தியாவில் இன்னும் உருவெடுக்கவில்லை என்பது தான் யதார்த்தம். மற்ற விளையாட்டுக்களில், இந்தியாவில், சேம்பியன் தரத்தில் ஒருவருக்கு மேல் இருந்தாலும் (டென்னிஸ்- லியாண்டர், மகேஷ், பாட்மிண்டன் -சாய்னா, சிந்து, கிரிக்கெட்- பலர், தடகளம்- உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ்...), செஸ்-ஐ பொறுத்தவரை,  கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, ஆனந்த் ஒருவர் தான் உலகத்தரம் கொண்ட ஒரே சேம்பியன் ஆட்டக்காரர்.

ஆனால், மற்ற நாடுகளில், சிலபல குறிப்பிடத்தக்க ஆட்டக்காரர்கள், உலகத் தரத்தில் உருவாகியிருக்கிறார்கள் - லெவான் ஆரோனியன், ஹிகரு நாக்கமுரா, ஃபேபியானோ, செர்கி கராக்கின், மோரோசவிச், மைக்கேல் ஏடம்ஸ், க்ரைசக் அலெக்ஸாண்டர், எடின் பேக்ராட், வேங்க் ஹோ, மமெடயரோவ் போன்றவர்கள்.

சரி, கார்ல்சனுக்கு வருவோம். அவருக்கு 7வது வயதில் தான் செஸ் மேல் ஆர்வம் ஏற்பட்டது. மிக குறுகிய காலத்திலேயே, தனது சற்றே தடாலடி ஆட்டத்தாலும், வித்தியாசமான ஓப்பனிங் அணுகுமுறையாலும் பலரையும் தன் பால் ஈர்த்து விட்டது நிஜம். அதே கார்ல்சன் தனது 12-வது ஏதோ ஒரு செஸ் போட்டியில் சரியாக விளையாடாமல், சுய பச்சாதாபத்தில். “இப்படி செஸ் ஆட்டத்தில் துளித் திறமையின்றி நான் ஏன் பிறந்தேன்?!?” என்று தன்னையே நொந்து கொண்டுள்ளார் :-)

8 வருடங்களுக்குப் பின், அவர் உலகின் நம்பர் 1 ஆட்டக்காரர் (ரேட்டிங் புள்ளிகள் 2872, செஸ் வரலாற்றில் கேஸ்பரோவ் உட்பட யாரும் தொடாத சிகரம் இது) ஆனது மட்டுமன்றி, ஒரு மெகா ஸ்டாராக, விளம்பரங்கள், தோற்றங்கள் வாயிலாக 2013-ல் 3.5 மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதித்தார்.  கேஸ்பரோவைப் போலவே, ஆனால் தனது 22-வது வயதிலேயே, டைம் பத்திரிகையின், உலகில் மிக்க செல்வாக்கு கொண்ட டாப் 100 நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் கார்ல்சன்.

கார்ல்சன் மார்ச் 2013-ல் நடந்த, உலகின் டாப் 8 ஆட்டக்காரர்கள் பங்கு பெற்ற, 14 சுற்றுகள் கொண்ட மிகக் கடினமான Candiates tournament-ல் முதலிடம் பெற்று, ஆனந்துக்கு போட்டியாளராக (challenger) அறிவிக்கப்பட்டார்.  யார் ஆனந்துக்கு போட்டியாளராக வருவார் என்பதை கடைசி சுற்று வரை சொல்ல முடியாத அளவுக்கு, த்ரில்லிங்காகவும், பல அருமையான ஆட்டங்கள் கொண்டதாகவும் இந்த Candiates tournament இருந்தது.  இறுதி 3 சுற்றுகளில் 2 தோல்விகளை கார்ல்சன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் இதை கவனத்தில் கொள்வது மிக அவசியம் :-)

போட்டி முடிவில் அவரும் கிராம்னிக்கும் சம புள்ளிகளில் (8.5/14) இருந்தும், அதிக வெற்றிகள் பெற்றவர் என்ற கணக்கில், கார்ல்சன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்!  ஆனந்தே, இதை Best ever Candidates tournament in history என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Candidates tournament ஆட்டங்களை இங்கே ஆடிப்பார்க்கலாம்!
http://www.chessgames.com/perl/chess.pl?tid=80233

இவற்றில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது இவை:
http://www.chessgames.com/perl/chessgame?gid=1712941 - Aronian vs Gelfand
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713231 - Svidler vs Carlsen
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713866 - Aronian vs Kramnik
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713636 - Carlsen vs Ivanchuck
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713488 - Gelfand vs Aronian
http://www.chessgames.com/perl/chessgame?gid=1714070 - Carlsen vs Svidler
http://www.chessgames.com/perl/chessgame?gid=1714073 - Ivanchuck vs Kramnik

கார்ல்சனின் செஸ் வலிமைகள், அவரது பயமின்மை, டிராவுக்கு (draw)  ஆடாமல் கடைசி வரை போராடும் குணம், வித்தியாசமான தொடக்க ஆட்ட அணுகுமுறைகள், தன்னம்பிக்கையும், உடல் திடமும் தரும் மனவலிமை ஆகியவை. சமீபத்தில் நடந்த Sinquefield Cup போட்டி ஆட்டத்தில், கஷ்டமானதொரு பொசிஷனிலிருந்து திறமையாக தப்பித்து, ஆட்டத்தை சமநிலைக்கு எடுத்து வந்து, லெவன் ஏரோனியன் டிரா கேட்டும் தர மறுத்து, மெல்ல மெல்ல தனது பொசிஷனை பலப்படுத்திக் கொண்டு, 70 நகர்த்தல்களுக்குப் பின் கார்ல்சன் ஆட்டத்தை வென்றார். ஒரு மலைப்பாம்பு தனது இரையை சுற்றிக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கிச் சாகடிக்கும் விதத்துக்கு நிகரானது இது!

”Carlsen is also one of the most talented players from any generation. He will be ridiculously difficult to play against” என்று ஒப்புக் கொள்ளும் ஆனந்த், தான் under dog ஆக குறிப்பிடப்படுவது பற்றி அதிகமாக சிந்திப்பதில்லை என்றும், தனது உழைப்பு, ஆற்றல், அனுபவம் இவற்றைக் கொண்டு போட்டியை நல்ல முறையில் எதிர்கொள்வதில் மட்டுமே தனது கவனம் முழுதும் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனந்தின் மேல் தற்போது லேசான கடுப்பில் இருக்கும் கேஸ்பரோவ், கார்ல்சனுக்கு ஆலோசகராக இருப்பது, கார்ல்சனுக்கு பலன் தரும் விஷயமே! கார்ல்சனுக்குத் தான் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கூறும் கேஸ்பரோவ், ஆனந்தை வெற்றி கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

இறுதியாக, ஆனந்த் 2008, 2010-ல் விளையாடியது போல தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக ஆடி, நடு ஆட்டத்தில் (middle game) நுழையும்போது, சற்றே சாதகமான பொஸிஷனுடன் இருக்க வேண்டியது அவசியம். அது போல, வெள்ளைக் காய்களோடு விளையாடும்போது, aggression, சில சமயங்களில் novelty, அவசியம்.  மெத்தனமாக (passive)  ஆடினால், கார்ல்சன் கை ஓங்கி விடும் அபாயம் உள்ளது.  இந்த செஸ் உலகப்போட்டி, ஃபிஷர் vs ஸ்பாஸ்க்கி, காஸ்பரோவ் vs கார்போவ் உலகப் போட்டிகளுக்கு நிகரான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

நேரம் கிடைக்கும்போது, போட்டியின் interesting ஆட்டங்கள் குறித்து எழுதலாம் என்ற உத்தேசம் இருக்கிறது.  பார்க்கலாம்!

எ.அ.பாலா

Friday, November 01, 2013

பெருமாள் பெயரில் ஒரு நூதனத் தீண்டாமை!



’பெருமாளுக்குத் தீட்டு’ புகழ் தேவநாத சுவாமி கோயிலில் (கடலூர் மாவட்டம், திருவந்திபுரம்), இன்னொரு மகாஅவலம் பல ஆண்டுகளாக நடந்தேறி வந்திருந்தாலும், இப்போது தான் அது கலெக்டர் (மனு வடிவில்) வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்! இக்கோவிலுக்கு அருகில், ”குரு பரம்பரை”யின் கடை ஆசார்யரான மணவாள மாமுனிகளுக்கு கோயில் ஒன்றுள்ளது.   பல ஆண்டுகளாக, ஐப்பசி மாதம் நடைபெறும் மாமுனிகளின் உத்சவ சமயம், அவரது விக்ரகத்தை வீதி ஊர்வலமாக எடுத்து வரும் வழக்கம் உள்ளது.  மாமுனிகளின் விக்ரகம் தேவநாத சுவாமி கோயில் முன் வருகையில், கோயில் கதவு மூடப்பட்டு விடும்.  அதாவது பெருமாள் மணவாள மாமுனிகளை பார்த்தால், பெருமாளுக்குத் தீட்டும் தோஷமும் ஏற்பட்டு விடுமோ என்னவோ?!?!

வைணவ திவ்யதேசமான தேவநாத சுவாமி ஆலயம் வடகலை சம்பிரதாயக் கோயில், மணவாள மாமுனிகள் தென்னாச்சார்ய வழி ’குரு பரம்பரை’யின் கடைசி குரு.  உடையவர் இராமானுஜரின் அவதாரமாகவும் (ஏராரும் எதிராசன் என உதித்தான்) அரங்கநாதர்க்கே குருவாகவும் கருதப்படுபவர்.  அதாவது, பெருமாளில் தொடங்கி, மாமுனிகளில் முடியும் குரு பரம்பரையானது ’ஆச்சார்ய ரத்தின மாலை போன்றது.  மாமுனிகள் வைணவம் சார்ந்த பல சிறந்த கிரந்தங்களை இயற்றியுள்ளார்.

கோயில் கதவுகளை மூடி,   வைணவம் தழைக்க வந்த ஒரு பெருந்தகையை இப்படி அவமானப்படுத்துவது கூட ஒரு வகையான தீண்டாமையே என்றும், மணவாள மாமுனிகள் ஊர்வலம் செல்கையில் பெருமாள் கோயில் கதவுகளை மூடக்கூடாது என்றும் ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரட்சண சபையின் தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசரும், இன்னும் சிலபல பக்தர்களும் கலெக்டரிடம் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர், இந்த ஆண்டு கோயில் கதவுகள் மூடப்பட்டால், நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

அப்படியும், இந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதியன்று கலை 9 மணி அளவில், மணவாளமாமுனிகள் விக்ரகம், ஊர்வலமாக தேவநாத சுவாமி கோயிலைக் கடக்கையில், கோயில் கதவுகள் மூடப்பட்டன.  இரு தரப்பினருக்கும் இடையே பலத்த வாக்குவாதமும் நிகழ்ந்து போலீஸ் வந்து அமைதிபடுத்த வேண்டியிருந்தது. கோவிலுக்கு வந்த பொது மக்கள் அதிர்ந்து போய் இதை கவனித்துக் கொண்டிருந்தனர்.  கோயில் பணியாளர்கள் இருவர், இந்த அவலக் கூத்தை புகைப்படம் எடுத்த பத்திரிகை சார்ந்த புகைப்படக்காரர்களை மிரட்டி, அவ்விடத்தை விட்டு துரத்த முயன்றுள்ளனர். 

இவை எல்லாவற்றுக்கும் உச்சம், கோயில் தலைமை அதிகாரி, “மணவாள மாமுனிகள் ஊர்வலத்தின்போது கோயில் கதவுகளை மூடுவது என்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு சம்பிரதாயம் (கடவுளே, கடவுளே, கடவுளே!!!!!) இந்த சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் அனாவசியமாக இதை ஒரு பிரச்சினை ஆக்கியிருக்கிறார்” என்று சொல்லியிருப்பது தான்!

இவர் போன்ற ஆட்களையும், அண்ணல் இராமானுஜர் போதித்த வைணவத்துக்கு உரித்த விரிந்த நோக்கமும், அடக்கமும், புரிதலும், அடியார்க்கு அடியராய் இருக்கும் பண்பும் அறவே இல்லாத இந்த கோயில் அர்ச்சகர்களையும்அந்த தேவநாதப் பெருமாள் கூட திருத்த முடியாது!!!

வடகலையாருக்கு மணவாள மாமுனிகள் ஆகாமல் போனதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. அது சற்றே நீண்ட சமாச்சாரம் என்பதால், விவரமாக அடுத்த இடுகையில் சொல்கிறேன்.  பொறுத்திருக்கவும்.

எ.அ.பாலா

பிற்சேர்க்கை: இதை வடகலை vs தென்கலை சண்டை சச்சரவாக மட்டும் எடுத்துக் கொள்ள இயலாது.  ஏனெனில், பார்ப்பனர் அல்லாத வைணவர் பலரும், இராமானுஜரைப் போலவே, மணவாள மாமுனிகளையும் வழிபாட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய, வைணவம் தழைக்க அவதரித்த, ஒரு மகானாகவே கருதி, பல வைணவ திவ்ய தேசங்களில் நடைபெறும் மாமுனிகளின் திருநட்சத்திர வைபவத்தில் கலந்து கொள்கின்றனர்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails